December 10, 2018
தண்டோரா குழு
பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவியை கடத்திய 4 பேரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக சென்னை கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் பெங்களுரை சேர்ந்த ஆசூர் ஆலம், செல்வின், நவாஸ், பீரித்தி ஆகியோரிடம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 95 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதுகுறித்து இரு தரப்பிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இதன் வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவி ஜீலி ஆகியோரை சிலர் கடத்தி உதகையில் அடைத்து வைத்திருப்பதாக அவரது மகள் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து உதகையில் உள்ள பவர் ஸ்டாருக்கு சொந்தமான பங்களாவை எழுதி வைக்குமாறு கடத்தியவர்கள் கூறியதை அடுத்து உதகை பங்களா ஜீலி பெயரில் உள்ளதால் பவர் ஸ்டாரை விடுவித்தால் எழுதி தருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பவர் ஸ்டார் நேற்று விடுவிக்கப்பட்டதையடுத்து அவர் சென்னை சென்று கோயம்பேடு காவல்நிலையத்தில் தனது மனைவியை சிலர் உதகையில் உள்ள ஒரு பங்களாவில் கடத்தி அடைத்து வைத்திருப்பதாக புகார் அளித்தார். இதையடுத்து, உதகை ஜி1 காவல் துறையினர் ஜீலியை மீட்டு கடத்திய 4 பேரையும் கைது செய்து சென்னை கோயம்பேடு காவல்நிலைய காவல் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜீலி,
தன்னை பெங்களுரை சேர்ந்த 4 பேர் உதகைக்கு கடத்தி வந்து தனியார் பங்களாவில் அடைத்து வைத்து பவர் ஸ்டாருக்கு சொந்தமான உதகை பங்களாவை எழுதி வைக்குமாறு வடமாநில இளைஞர்கள வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறினார்.
இதையடுத்து 7 நாட்களாக பவர் ஸ்டாரின் கடத்தல் சம்பவம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.