December 6, 2018 தண்டோரா குழு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தகோரி தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளது. இன்று (டிச.,6) சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி கண்டன தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. அதைபோல் டெல்லியில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் இரண்டாவது கூட்டத்தில் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது.
இந்நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், மேகதாது விவகாரம் குறிதது விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும். தமிழக அரசுடன் பேசி சுமூக தீர்வு காணவே கர்நாடகா விரும்புகிறது. மேகதாது அணை குறித்து மக்களும், தமிழக அரசும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். தவறான கருத்துகளை களைய முதல்வரை நேரில் சந்தித்து பேசி தெளிவுபடுத்த விரும்புகிறோம். அணை கட்டுவதால், மேட்டூரில் இருந்து தண்ணீர் கடலில் கலப்பது தடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தலைமையில் ஒரு குழு, நாளை(டிச.,7) மேகதாதுவுக்கு சென்று அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.