December 4, 2018
தண்டோரா குழு
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தந்தையை இழந்து வறுமையில் வாடும் 3 குழந்தைகளை தத்தெடுத்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிகிறது.
சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சியை சேர்ந்த கோட்டூர்சாமி என்பவர் இருதினங்களுக்கு முன் சாலைவிபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தை வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரிப்பதற்காக கோட்டூர்சாமியின் வீட்டிற்கு புளியங்குடி காவல் ஆய்வாளர் ஆடிவேல் சென்றார்.அப்போது தான் அந்தக் குடும்பம் வறுமையில் இருப்பது அவருக்கு தெரியவந்தது.
கை, கால் எலும்பு முறிவால் முடங்கிய தாயையும், மாற்றுத்திறனாளி சிறுவன் உள்ளிட்ட மூன்று குழந்தைகளையும் தந்தை இழந்து வறுமையில் வாடுவதை கண்ட காவல் ஆய்வாளர் ஆடிவேல் மூன்று குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்தார். இதையடுத்து 3 குழந்தைகளையும் தத்தெடுத்து அவர்களது வாழ்நாள் முழுவதுக்குமான செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
காவல் ஆய்வாளரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.