December 3, 2018
தண்டோரா குழு
மருத்துவம் படிக்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிக்கு தானே வங்கிக்கு நேரில் சென்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கல்விக்கடன் பெற்றுக்கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சகானாஸ் பேகம் என்ற மாணவி பல் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். குடும்ப வறுமையின் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மாணவி சாஹானஸ் பேகத்தை நேரில் சந்தித்துள்ளார். பின்பு அந்த மனைவியை சேலம் இந்தியன் வங்கிக்கு தானே அழைத்துச் சென்று வங்கி அதிகாரிகளிடம் பேசி 10 நிமிடங்களில் மாணவியின் கல்விக்கடனுக்கு 4 லட்சம் ரூபாய் பெற்று தந்தார்.
தனது மருத்துவ கனவு நிறைவேறியதை கண்டு மாணவி ஆட்சியர் ரோகிணியை செய்த உதவிகளுக்காக அவரிடம் கண்ணீர் மல்க மாணவி நன்றி தெரிவித்தார்.
அப்போது மாணவி சகானாஸ் பேகத்தின் கண்ணீரை மாவட்ட ஆட்சியர் துடைத்துவிட்டது அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. மாணவி அழுகையை பார்த்து ஆட்சியர் ரோகிணி கண்கலங்கினார்.
பின்னர் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி ,
ஆட்சியர் என்ற முறையில் இல்லாமல், ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை கருதி இந்த உதவியை செய்ததாக கூறினார். மேலும் வறுமை நிலையில் கல்வி பயலும் பலருக்காக ஆட்சியர் என்ற முறையில் 24 மணிநேரமும் உதவிகள் செய்ய காத்திருப்பதாக தெரிவித்தார். பெண்கள் எக்காரணத்தை கொண்டு கல்வியை கைவிட்டுவிடக்கூடாது என ஆட்சியர் ரோகிணி கேட்டுக்கொண்டார். கல்லூரி மாணவிக்கு உதவிய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி கண்கலங்கிய சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.