December 3, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்திலுள்ள நான்காயிரம் ஏக்கரிலான பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி தாழ்த்தப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி
நடத்தினர்.
சமூக நீதிக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்றனர். பட்டியலின மக்களுக்கு 1892 ஆம் ஆண்டு நிபந்தைனைகளுடன் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் மற்ற சமூகத்தினர் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், அன்னூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, வால்பாறை, பேரூர் மற்றும் வடக்கு கோவை ஆகிய தாலுக்கா பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான பஞ்சமி நிலங்களில் 30சதவிகிதம் மற்ற சமூகத்தினரிடம் உள்ளதாகவும், மீதமுள்ள 70சதவிகிதம் நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர்களில் பதிவேடுகளில் காணப்பட்டாலும், பெரும்பாலும் மற்ற சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பேரணியின்போது குற்றச்சாட்டப்பட்டது.
இப்பேரணியானது கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே துவங்கி சுமார் 3கி.மீ, பயணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.