December 3, 2018
தண்டோரா குழு
பாதுகாப்பற்ற முறையில் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றிய விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடி ஆட்சியர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அம்னுவில்,”தொழிற்சாலை கழிவுகளை அகற்றும் போது முறையாக தெரிவிக்க வேண்டுமென்ற விதியுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், 3.52 லட்சம் டன் கழிவுகளை தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டியுள்ளனர். இதே அளவிலான கழிவுகளை தனியார் பட்டா நிலத்திலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கொட்டி வைத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரும் புகார் அளித்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், ஆனால் அவர்கள் அதில் கவனம் செலுத்த தயங்குகின்றனர். மாசுபடுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் மீது, மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.