November 26, 2018
தண்டோரா குழு
சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சபரிமலையில் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு கட்டுபாடுகளை பக்தர்களுக்கு விதித்து விதித்துள்ளனர்.அதன்படி பக்தர்களின் வாகனங்கள் சபரிமலையின் நுழைவு வாயிலான நிலக்கல்லில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து அரசு பேருந்தில் பம்பை செல்ல வேண்டும்.
இந்நிலையில்,சபரிமலைக்கு கடந்த 20-ந் தேதி இருமுடிக்கட்டுடன் காரில் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.அப்போது அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. யதீஸ்சந்திராவிற்கு வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து,அமைச்சருடன் வந்திருந்த பா.ஜனதா தொண்டர்களின் கார்களை பம்பைக்கு அனுமதிக்காததால்,அவர் அரசு பஸ்சில் சபரிமலைக்கு சென்றார்.பின்னர் சாமி தரிசனம் முடித்து திரும்பும் வழியிலும் பொன் ராதாகிருஷ்ணனுடன் சென்ற தொண்டர்களின் கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து,பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்,கேரள காவல்துறையினர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்து விட்டதாக கூறி குமரியில் நேற்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.இதற்கிடையில்,பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி மீதும்,கேரளா அரசு மீதும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கேரள பாஜக புகார் அளித்தது.
இந்நிலையில்,திருச்சூர் காவல் ஆணையராக யதீஷ் சந்திராவை இடமாற்றம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.அதைபோல் திருச்சூர் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த புஷ்பாகரனை நிலக்கல் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளார்.