November 23, 2018
தண்டோரா குழு
மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாமல் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயை உடைத்தால் வோடபோன் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 41வது வார்டில் இந்திய உணவுக்கழக சாலையில் மாநகராட்சியிடம் முறையாக அனுமதி ஏதும் பெறாமல் தொலை தொடர்பு கேபிள்களை பதிக்க வோடபோன் நிறுவனத்தார் தரையில் பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது, இந்திய உணவுக்கழக சாலையில் செல்லும் மாநகராட்சி பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. இதனால், அப்பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க இயலாமல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில்,பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதுடன் மாநகராட்சிக்கு அவப்பெயர் வர காரணமாக இருந்ததால் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் வோடபோன் நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.