November 23, 2018
தண்டோரா குழு
பாளையங்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட காலணிகளை சுத்தம் செய்து புகைப்படக் கலைஞர் நிதி திரட்டி வருகிறார்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப்பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. கஜா புயல் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தை தாக்கியுள்ளது. இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும், 1 லட்சத்து17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும்,30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.
கஜா புயலினால் மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளானதால் மக்களின் 9 நாட்களாக மக்களின் இயல்பு நிலை மாறியுள்ளது. தற்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தேவையான பொருட்களையும், நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், பாளையங்கோட்டையைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான பாபுராஜ் என்பவர் புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவுவதற்கு நிதி திரட்டும் வகையில் தினமும் ஒவ்வொரு கல்வி நிலையத்தின் வாயிலில் அமர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மாணவ-மாணவியரின் காலணிகளை சுத்தம் செய்து வருகிறார். அதன் மூலம் கிடைக்கும் நிதியை திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இவரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.