November 16, 2018 தண்டோரா குழு
கஜா புயலினால் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியதால் தமிழக அரசு மின்கம்பங்களை சீரமைக்க போர்க்கால நடவடிக்கைகளில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
தமிழகத்தை கஜா புயல் புரட்டி போட்டு இருக்கிறது.இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது.கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.புயல் கரையை கடந்த போது,120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.இந்த நிலையில் தற்போது பல மாவட்டங்களில் காற்று வீசி வருகிறது.
மேலும்,இந்த கஜா புயல் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கஜா புயல் காரணமாக 3 மாவட்டங்களில் சுமார் 12,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
இந்நிலையில்,மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,
“9 மாவட்டங்களில் மின்கம்பங்கள்,சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 11,371 பேர் ஈடுபட்டுள்ளனர்.அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த 7776 பேரும்,மற்ற மாவட்டங்களில் இருந்து 3,400 பேரும் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக மின்விநியோகத்தை சரி செய்யும் வகையில்,சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. புயல் பாதித்த ஆறு மாவட்டங்களில் 420 முகாம்கள் அமைக்கப்பட்டு 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன”.