November 15, 2018 தண்டோரா குழு
கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் செல்லாராம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாநகருக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வரும் தொடர் தகவலையடுத்து உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஒரு டன் அளவிலான குட்கா மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கோவை சொக்கம்புதூர் அடுத்த அன்னை இந்திரா நகர் பகுதியில் குட்கா பொருட்கள் மினி லாரி ஒன்றில் ஏற்றுவதாக ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு சென்று சோதனை நடத்திய கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தவரான செல்லாராம் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வீட்டின் ஒரு அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 450 கிலோ எடையிலான பான்பராக்,குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த பொருட்களின் மதிப்பு சுமார் நான்கு லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெங்களூரில் இருந்து இந்த பொருட்கள் கோவைக்கு கடத்தப்படுவதாகவும் கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய கடைகளுக்கு இந்த போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த பறிமுதல் தொடர்பாக செல்லாராம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உணவு மாதிரி எடுத்த சோதனைக்காக அனுப்ப உள்ளதாகவும் கூறியதுடன் சோதனை முடிவுகள் வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.