October 25, 2018
தண்டோரா குழு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என 3-வது நீதிபதி சத்திய நாராயணன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர்ராவிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புகார் கொடுத்தனர்.இதையடுத்து புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி மாதம் தகுதி நீக்கம் செய்தார்.
இதையடுத்து,தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரித்து தீர்ப்பு வழங்கினர்.
அதில்,தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பேரவைத் தலைவர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.நீதிபதி எம்.சுந்தர் தனது தீர்ப்பில்,இயற்கை நியதிக்கு எதிராக பேரவைத் தலைவர் முடிவு எடுத்துள்ளார். தகுதி நீக்கம் செய்வதற்கு முன் 18 பேருக்கும் போதிய வாய்ப்பு தரப்படவில்லை.எனவே,பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டார்.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் இந்த வழக்கை விசரிக்க 3வது ஒரு நீதிபதியாக எம்.சத்யநாராயணனை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.அதன் அடிப்படையில்,நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்குகளை விசாரித்தார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்ய நாராயணன் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில்,பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10-30 மணிக்கு வழங்கப்பட்டது.அதில்,18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் எனவும்,சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என 3வது நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.