October 10, 2018
தண்டோரா குழு
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்துக் கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.இதற்கிடையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும்,ஒப்பந்தத்தை ரத்து செய்வதுடன்,ஒப்பந்தம் பற்றி தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கறிஞர் வினீத் என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில்,ரபேல் போர் விமானத்தின் விலை,ஒப்பந்த விவரம்,காங்கிரஸ் அரசில் நிர்ணயிக்கப்பட்ட விலை,பாஜக அரசில் நிர்ணயம் செய்யப்பட்ட விலை ஆகியவற்றை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
மேலும்,மற்றொரு வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர்,பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க இருக்கும் ரபேல் போர் விமானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அதனை விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இதையடுத்து,ரபேல் ஒப்பந்தம் எதன் அடிப்படையில் கையெழுத்தானது,கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டதற்கு என்ன காரணம்,யாருடைய வழிகாட்டுதலின் படி ஒப்பந்தம் போடப்பட்டது என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்29 க்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்திரவிட்டனர்.