October 5, 2018
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் மழைக்கால முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறிப்பாக மாநகராட்சி முழுவதும் புகார் அளிக்க மண்டல வாரியாக தொடர்பு எண்கள் கோவை மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டும் உள்ளது.
கோவை மாநகராட்சியில் மழை தொடர்பாக மாநகராட்சியின் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் தகுந்த முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிக்கை மூலமாக தெரிவித்து உள்ளார். மழைக்காலங்களில், பொதுமக்கள் குடி தண்ணீரை நன்றாக காய்ச்சிய பின்னர் அருந்த வேண்டும், பொதுமக்கள் தங்களின் வீட்டைச் சுற்றி தேவையற்ற உடைந்த பாட்டில்கள், தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்து பல்வேறு அறிவுரைகள் அளிக்கப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் மழைக்காலங்களில் இடையூறுகள் ஏற்பட்டால் அதுதொடர்பான புகார்களை மாநகராட்சி பிரதான அலுவலகம் 0422-2302323 என்ற எண்ணிற்கும், மேற்கு மண்டலம் 0422-2551700 என்ற எண்ணிற்கும், வடக்கு மண்டலம் 0422-2243133 என்ற எண்ணிற்கும், தெற்கு மண்டலம் 0422-2252482 என்ற எண்ணிற்கும், கிழக்கு மண்டலம் 0422-2577056 என்ற எண்ணிற்கும், மத்திய மண்டலம் 0422-2215618 என்ற எண்ணிற்கும், தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொதுமக்கள் மழை தொடர்பான உடனடி புகார்களை 8190000200 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும், கோயம்புத்தூர் மாநகராட்சியைச் சேர்ந்த சம்மந்தப்பட்ட அனைத்து அலுவலர்களும் தகுந்த முன்னெச்சரிக்கை பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தம் 58.60 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக, சின்கோனா பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக வேளாண் பல்கலைக் கழக பகுதியில் 1.20மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகி உள்ளது.