October 3, 2018
தண்டோரா குழு
சபாநாயகர் தனபாலை அவரது பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலருக்கு கருணாஸ் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் கடந்த சில தினங்களாக கருணாஸ் எம்எல்ஏ விவகாரம் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. முதல்வரை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
எனினும், அவர் மீதும் ஆளும் கட்சி மீதும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார். இதற்கிடையில், கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தரப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் எம்எல்ஏ கடிதம் எழுதி உள்ளார். அவரது வழக்கறிஞர்கள் மூலம் அந்த கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
கருணாஸ் தரப்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,.
சபாநாயகர் தனபால் அரசியலமைப்பின்படி செயல்படவில்லை. சபாநாயகர் பதவிக்கு தனபால் பொருத்தம் இல்லை என்பது அவரது செயல்பாடுகளில் இருந்து தெரிகிறது.
பேரவையின் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் சட்டங்களை சபாநாயகர் தனபால் மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ‘சபாநாயகரின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.