October 1, 2018
தண்டோரா குழு
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர்களை துன்புறுத்துவதாக கூறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாய், தலையணையுடன் சாலையில் படுத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்,வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து சசிகுமார் கொலை தொடர்பாக முபாரக்,சதாம்,சுபேர்,அபுதாகீர் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமைக்கு மாற்றப்பட்டது.தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் புதிதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர்,முபாரக்,சதாம் உசேன்,சுபேர் ஆகியவர்களின் வீடுகளில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த முறை நடைபெற்ற சோதனையில் அபிதாகீர்,சுபேர் இல்லங்களில் மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசையும்,தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் பாய், தலையணை,போர்வை,குடம் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து பந்தைய சாலையில் பகுதியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது அவர்களை தடுத்து நிறுத்திய போது காவல் துறையினருக்கு,அவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சசிகுமார் கொலை வழக்கை வைத்து எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட காட்சிகளை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும்,சசிகுமாரின் கொலையின் போது துடியலூரில் நடைபெற்ற கலவரத்தில் 238 கடைகள் இந்து அமைப்பினரால் அடித்து நொறுக்கப்பட்டதாக புகார் கூறினர்.அக்கலவரத்தில் ஈடுபட்ட ஒருவரை கூட இதுவரை கைது செய்யவில்லை எனவும் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.