October 1, 2018
தண்டோரா குழு
சிவாஜி கணேசன் சிலையின் கீழ் கருணாநிதியின் பெயரை பொதிக்க வேண்டும் என நடிகர் பிரபு கூறியுள்ளார்.
திரையுலகளில் யோசிக்க முடியாத சாதனைகளை படைத்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு இன்று 91வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில்,நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.அதன்படி சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதையடுத்து,சென்னை அடையாரில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் உள்ள சிவாஜியின் சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ,திண்டுக்கல் சீனிவாசன்,விஜயபாஸ்கர்,செல்லூர் ராஜூ,பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன்,நடிகர்கள் பிரபு,விக்ரம்பிரபு,விஜயகுமார்,டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார்,பி.சி.அன்பழகன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு,
சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.அடையாறு மணி மண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் சிலையின் கீழ் கருணாநிதியின் பெயரை பொதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.அரசு தரப்பில் அதை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர்.