September 11, 2018
தண்டோரா குழு
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த, ஐதராபாத் நிஜாம் பயன்படுத்திய வைரம் பதித்த, ‘டிபன் பாக்ஸ்’ மற்றும், ‘டீ கப்’ ஆகியவற்றை திருடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நம்நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்,ஐதராபாத்தை தலைமையிடமாக வைத்து,நிஜாம் மன்னர்கள் ஆட்சி செய்தனர்.கடைசியாக 7-வது நிஜாம் உஸ்மான் அலிகான் பகதூர் ஆவார்.அவருக்கு பின் நாடு சுதந்திரம் பெற்று ஐதராபாத் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.தற்போது,ஐதராபாத்,தெலுங்கானா மாநில தலைநகராக உள்ளது.
புரானி ஹவேலி பகுதியில்,ஐதராபாத் நிஜாம்களின் அருங்காட்சியகம் உள்ளது.இந்த அருங்காட்சியகத்தில் நிஜாம் மன்னர்கள் அரண்மனையில் பயன்படுத்திய பொருட்கள் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.இதில்,கடைசி நிஜாமான,மீர் உஸ்மான் அலி கான் அசப் ஜா பயன்படுத்திய விலையுயர்ந்த பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில்,கடந்த 4ம் தேதி காலை,அருங்காட்சியகத்தை திறந்த ஊழியர்கள்,வைரக்கற்கள் பதித்த,5 அடுக்கு தங்க, டிபன் பாக்ஸ்,டீ கப் ஆகியவை திருடப்பட்டதை கண்டுபிடித்தனர்.சர்வதேச சந்தையில் புராதன பொருட்களின் மதிப்புப்படி,கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு,50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இதையடுத்து,இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மியூசியத்தின் 2 அடி அகலம் கொண்ட வென்டிலேட்டர் வழியாக கயிறுகட்டி உள்ளே இறங்கி வந்த கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.இதனிடையே 10 தனிக்குழுக்களை அமைத்து,கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில்,இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நேற்றிரவு 2 கொள்ளையர்கள் சிக்கினர்.அவர்களிடமிருந்து தங்க டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.நண்பர்களான இரண்டு கொள்ளையர்களும் கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு இதனை திருடியுள்ளதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.