September 5, 2018
தண்டோரா குழு
குன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை விஜய்யை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.
சென்னை அருகேயுள்ள குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இத்தம்பதிக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.இதற்கிடையில், குன்றத்தூரில் பிரியாணிக் கடை ஒன்றில் பணியாற்றும் சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த விஜய் அபிராமியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய அபிராமி முயன்றுள்ளார்.
கடந்த 30-ஆம் தேதி கணவன் விஜய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து அபிராமி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் அவரது மகள் மட்டும் இறந்துள்ளார். இதனையடுத்து 31-ஆம் தேதி கணவர் வேலைக்குச் சென்றவுடன் மகனுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். இதில் மகனும் இறந்துள்ளார். கணவன் விஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில் தப்பிச்சென்ற அபிராமியை தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் சுந்தரத்தின் உதவியுடன் நாகர்கோவிலில் வைத்து காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதல் மோகத்தால், பெற்ற குழந்தைகளை தாயே பாலில் விஷம் கலந்து கொன்ற சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்நிலையில்,குழந்தைகளை இழந்துத் தவிக்கும் அபிராமியின் கணவர் விஜயை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். விஜயும் அவரது குழந்தைகளும் ரஜினியின் தீவிர ரசிகர்கள் என கூறப்படுகிறது.