September 4, 2018
தண்டோரா குழு
சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,நேற்று மாலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவர் பயணித்த விமானத்தில் இருந்த சோபியா என்ற மாணவி,‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என கோஷம் போட்டு அவரிடம் பிரச்சனை செய்தார்.
இதைத் தொடர்ந்து,தூத்துக்குடி விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியதும்,தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து,தமிழிசை சௌந்தர்ராஜன் அளித்தப் புகாரின் பேரில்,சோபியா மீது காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர்,15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மாணவி சோபியா கைதிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இதையடுத்து,அவர் மீதான வழக்கு இன்று மதியம் 12 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது விசாரித்த நீதிபதி,அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்திரராஜன்,
“பாஜகவுக்கு எதிராக முழக்கமிடப்போகிறேன் என முன்கூட்டியே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சோபியா .திட்டமிட்டே பாஜக ஆட்சிக்கு எதிராக பேசியுள்ளார். சோபியாவின் பின்னணியில் இயக்கம் ஏதாவது ஒன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது.மேலும்,சோபியா மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை வாபஸ் பெறப்போவாதில்லை என தெரிவித்துள்ளார்”.