September 3, 2018
தண்டோரா குழு
எந்திரன் திரைப்பட கதை உரிமை கோரிய வழக்கில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான படம் எந்திரன் படம். இப்படம் தமிழ் சினிமாவுக்கே புதிய அத்தியாயத்தை உருவாக்கி தந்ததையடுத்து, இதன் இரண்டாம் பாகம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.இதனையடுத்து,தன் தரப்பு ஆதாரங்களை ஷங்கர் நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் அவரை எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் ஷங்கர் வெளியூரில் இருப்பதால் வழக்கு விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என அவரது தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், இந்தத் தொகையை புளூ கிராஸ் அமைப்பிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணை வரும் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.