August 24, 2016
தண்டோரா குழு
பாகிஸ்தானைப் புகழ்ந்து பேசியதற்காக நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.எனினும் பாகிஸ்தான் குறித்துத் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,நடிகையுமான ரம்யா, பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.இதன் பின்னர் பெங்களூர் திரும்பிய அவர் தமது அனுபவங்களை ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்.
அப்போது “பாகிஸ்தான் மக்கள் நம்மைப் போலவே சாதாரணமாகத் தான் வாழ்கின்றனர் என்றும் இந்தியாவிலிருந்து சென்ற எங்களுடன் மிகுந்த நட்புடன் பழகினர் எனவும் கூறினார்.மேலும், அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போன்று அது நரக தேசம் அல்ல.நல்ல நாடாகவே இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், வழக்கறிஞர் ஒருவர், ரம்யா மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்தார்.அந்தப் புகாரின் பேரில் ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரம்யா,பாகிஸ்தானைப் புகழ்ந்து பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மேலும், இந்த மனு மீதான விசாரணை வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.