August 27, 2018
தண்டோரா குழு
கோவையிலிருந்து அறம் பவுண்டேஷன் அறக்கட்டளை கேரளாவுக்கு சார்பில் 21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைகப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
இதையடுத்து, கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள்
என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. தற்போது போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவை அறம் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் கோவையிலிருந்து கேரளாவிற்கு ரயில் மூலம் 21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கபட்டது.
இது குறித்து அறம் பவுண்டேஷன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் கூறுகையில்,
கேரளாவில் ஏற்பட்ட கனமழையால் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பலர் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர். அந்த வகையில்அறம் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் கேரளாவிற்கு நிவாரண பொருட்களை அனுப்ப முடிவு செய்தோம்.இதற்காக அறம் பவுண்டேஷன் அறக்கட்டளை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் தங்களால் ஆன நிவாரணப் பொருட்களை அளித்தனர்.அதன்படி, அரிசி, சர்க்கரை, பிஸ்கட், புதிய ஆடைகள்,பெட்சீட்கள், தண்ணீர் பாட்டில்கள், நாப்கின், மருந்துகள் மற்றும் கேரளாவில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கேட்டதற்கிணங்க தமிழகம் முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்ட 7 டன் வைக்கோல் உள்ளிட்ட 21 டன் நிவாரணப் பொருட்களை கோவையில் இருந்து கேரளமாநிலம் ஆலுவாவிற்கு ரயில் மூலம் அனுப்பி வைத்தோம்.
எனினும், 21 டன் நிவாரணப் பொருட்களை எடுத்த செல்ல இலவசமாக தனியாகவே ஒருகூட்ஸ் பெட்டியை ஏற்பாடு செய்தது கொடுத்த சேலம் கோட்டம் மேலாளார், சேலம் கோட்டம் வணிக மேலாளார் மற்றும் பொருட்களை எடுத்த செல்ல உதவிய ஊழியர்கள், நிவாரணப்பொருட்கள் அளித்த அனைவருக்கும் எங்கள் அறக்கட்டளை சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.