August 27, 2018
தண்டோரா குழு
உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரளா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன.தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
இதற்கிடையில்,கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம்,நிலச்சரிவுக்கு 392 பேர் பலி,33 பேரை காணவில்லை. வெள்ளம்,நிலச்சரிவால் 1,722 வீடுகள் முழுமையாக சேதம்,20,945 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளது என கேரள உள்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து,கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள்,இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.தற்போது போர்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.இந்த பணிகளையும் மழை,வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களையும் முதலமைச்சர் பினராயி விஜயன் பார்வையிட்டார்.
பின்னர் கேரளா முதலவர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில்,
“கேரளாவில் மழை குறைந்து,வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.இன்னும் 1,465 நிவாரண முகாம்களில் 4.62 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சுத்தம் செய்து தரப்பட்டுள்ளன.வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளையும்,பாலங்கள்,சாலைகள் கட்டமைப்பு வசதிகளை மீண்டும் மேம்படுத்தித்தர ஏராளமான நிதி தேவைப்படுகிறது.மாநிலத்தின் மறுக்கட்டமைப்பாக கேரளாவில் வாழும் மக்களும்,வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அளிக்க வேண்டும்.நம்முடைய வலிமையை கண்டறிவது அவசியம்.அனைத்து மக்களாலும் ஒரு மாத ஊதியத்தை அளிப்பது கடினம்.ஆதலால், கேரளாவில் வசிக்கும் மக்களும்,வெளிநாட்டில் வசிப்பவர்களும் ஒவ்வொரு மாதத்தில் 3 நாட்கள் ஊதியத்தை மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக அளிக்கலாம்”எனக் கூறியுள்ளார்.