August 17, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 324 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மற்றும் மீனவர்கள் தங்களின் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிரைமாத கர்ப்பிணியான சஜிதா ஜாபீல்(25)என்பவர் மழை வெள்ளத்தில் தவித்து வந்துள்ளார்.அவரை இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கேரளா முழுவதும் வெள்ளத்தால் மக்கள் துயரப்பட்டு வரும் நிலையில், தான் தாய்மை நிலையினை அடைந்திருப்பது மறக்கமுடியாத நிகழ்வாக கருதுவதாக சஜிதா தெரிவித்துள்ளார்.