August 7, 2018
தண்டோரா குழு
வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையில்,காவிரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது,24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்திருந்தது.
இதற்கிடையில்,காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில்,வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.மேலும்,தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மண்டல காவல்துறை தலைவர்கள்,துணைத் தலைவர்கள்,எஸ்பிக்கள், ஆணையர்களுக்கு டிஜிபி ஆணை பிறப்பித்துள்ளார்.அதைபோல் டி.எஸ்.பிக்கள்,ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சீருடைகளுடன் காவல் நிலையங்களுக்கு பணிக்கு திரும்பவும் விடுமுறையில் இருக்கும் காவலர்களும் உடனடியாக பணிக்கு திரும்பவும் டிஜிபி உத்திரவிட்டுள்ளார்.