August 3, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சிறுமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.தற்போது அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்டம்,வேப்பம்பட்டைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி மிக்கலே மிராக்ளின் என்பவர் கருணாநிதி உடல்நலம் பெறவேண்டி சமீபத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில்,
“எனக்கு கருணாநிதி தாத்தா ரொம்ப பிடிக்கும்.அவர் மேல எனக்கு அன்பு ரொம்ப அதிகம். உங்களுக்கு உடம்பு சரியில்லை என கேள்விப்பட்டவுடன் நான் அழுதேன்.உங்களுக்காக நான் இரவு மற்றும் காலையில் பிராத்தனை பண்னினேன்.தற்போது நீங்கள் நலமாக இருப்பதாக எனது தாய் என்னிடம் கூறினார்,எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.இப்போது நான் பள்ளிகூடத்திற்கு சந்தோசமாக செல்றேன்” என எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில்,சிறுமி மிச்செல் மிராக்லின் தனது தாய் ரோஸ்லினுடன் காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.அவரிடம்,நான் தாத்தாவை பார்க்க முடியுமா? என்று சிறுமி கேட்டார். அதற்கு மு.க.ஸ்டாலின்,”தாத்தா வீடு திரும்பியதும்,கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன்.நீ தாத்தாவிடம் பேசு” என்று கூறியதாக மிச்செல் மிராக்லினின் தாய் ரோஸ்லின் தெரிவித்துள்ளார்.