August 2, 2018
தண்டோரா குழு
ஜி.எஸ்.டி வரியால் தமிழக கைத்தறி தொழிலில் எந்த குறைபாடும் இல்லை எனவும்,கைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியும் விரைவில் குறைக்கப்படும் என கோவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன்,
“வருகின்ற பிப்ரவரி இறுதி வாரத்தில் கொடிசியா அரங்கில் 2 கோடி நிதியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி நடத்தப்படும்.இது தொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும்,உற்பத்தியாகும் ஜவுளிக்கும் விற்பனையாகும் ஜவுளிக்கும் உள்ள இடைவெளி குறைக்கவும்,ஜவுளி தன்மையை உலகறிய செய்யவும் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாகக் கூறினார்.
ஜவுளி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையும் எனவும்,உலகளாவிய ஜவுளி கண்காட்சியை ஒரு மாநில அரசு நடத்துவது இதுவே முதன் முறை என குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அதிகளவு ஜவுளி உற்பத்தி செய்யப்படுவதாகவும்,கடந்த ஆண்டை பொறுத்த வரை இலக்கை தாண்டி ஜவுளி உற்பத்தி அதிகரித்துள்ளதாகக் கூறினார்.ஜி.எஸ்.டியால் தமிழக கைத்தறி தொழிலில் எந்த குறைபாடும் இல்லை.
ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் பெரும்பான்மை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்,கைத்தறி தொழிலில் விதிக்கப்பட்டுள்ள 5% ஜி.எஸ்.டி வரியும் விரைவில் குறைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கைத்தறி துறைக்கு உட்பட்ட கூட்டுறவு சங்களின் கூலியை அரசு நிர்ணயம் செய்யும் ஆனால் தனியார் விசைத்தறியாளர்கள் கூலி விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மட்டும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
விசைத்தறியாளர்களின் கூலி விவகார பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்பட்டாலும்,நிச்சயம் முடிவு எடுக்கப்படும் எனக் கூறிய அவர்,கூலி விவகாரத்தில் முடிவுகள் எடுக்கப்படுவது இல்லை எனக் கூறுவது தவறு என தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.