July 30, 2018
தண்டோரா குழு
தொலைத்தொடர்பு ஒழுங்காற்று வாரியத் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவின் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாயைப் டெபாசிட் செய்துள்ள இணையத்தள ஹேக்கர்கள் அவருக்கும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள் முதல் மையல் கியாஸ் மானியம் வரையிலான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது ஆதார். இதற்கிடையில், ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை எனக் கூறி வந்த, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவுக்கு, மர்மநபர் ஒருவர் ட்விட்டரில் சவால் விடுத்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த சர்மா, தமது ஆதார் எண்ணை பதிவிட்டு “தமது ஆதார் எண்ணை வைத்து ஏதாவது தீங்கு ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் செய்து காட்டுங்கள்” என சவால் விடுத்தார்.
இந்த சவாலை ஏற்று இணையத்தள ஹேக்கர்கள், ஆர்.எஸ்.சர்மாவின் செல்பேசி எண்கள், வீட்டு முகவரி, பிறந்த நாள், பான் எண், வாக்காளர் அட்டை எண், தொலைத்தொடர்பு நிறுவனம், செல்பேசியின் வகை, ஏர் இந்தியா விமானப் பயண அட்டை உள்ளிட்ட பல தகவல்களைச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும், இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆதார் ஆணையம், சர்மாவின் தனிப்பட்ட தகவல்கள் ஆதார் மூலம் எடுக்கப்படவில்லை என்றும், பான், செல்பேசி எண் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் ஆதார் மூலம் பணம் செலுத்தும் வசதியைப் பயன்படுத்தி சர்மாவின் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாயை ஹேக்கர்கள் செலுத்தி அந்த ஒப்புகைச் சீட்டையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.ஒருவருடைய ஒப்புதல் இல்லாமலேயே அவர் கணக்கில் பெருந்தொகையைப் போட்டுவிட்டு நிதிமோசடிக் குற்றச்சாட்டைச் சுமத்தவும் முடியும் என்றும் சர்மாவுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதை கண்ட ட்ராய் சேர்மன் R.S.ஷர்மா மட்டுமின்றி பொதுமக்களும் விழிபிதுங்கி நிக்கின்றனர்.