July 26, 2018
தண்டோரா குழு
பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டணம் உயர்வு,காப்பீடு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எழாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நான்கரை லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் பலகோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.கோவையில் இதுவரை சுமார் 15 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பல்லாயிரம் கோடி வரத்தக தேக்கமும்,பல நூறு கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில் லாரி உரிமையாளர்கள்,ஓட்டுநர்கள்,கிளீனர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் என லாரி சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.
லாரி ஒட்டுநனர்களுக்கும்,கிளீனர்களுக்கும் லாரிகள் ஒடுவதை பொறுத்து நாள் வருமானம் அடிப்படையில் தினமும் சம்பளம் வாங்கி வருகின்றனர்.தற்போது லாரி நிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து லாரி ஒட்டுநனர் மூர்த்தி கூறுகையில்,
“தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால்,லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால் எங்களுக்கும் வருமானத்திற்கு வழியில்லை.இதே நிலைமை நீடித்தால் குடும்பத்தை எப்படி காப்பத்த போறோம் என தெரியவில்லை.எனவே இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனக் கூறினார்.
இதுகுறித்து கோவை லாரி உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கே.கலியபெருமாள் கூறுகையில்,
“லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் 7வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஓட்டுநர்கள்,கிளீனர்கள் மட்டுமின்றி லாரித் தொழிலை நம்பியிருக்கும் 45 அமைப்புகளை சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு இன்னும் மத்திய,மாநில அரசுக்கள் அழைக்கவில்லை. எனவே மத்திய அரசும்,மாநில அரசும் தலையிட்டு இந்த போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.இல்லையென்றால் போராட்டம் தீவிரமடையும்”.எனக் கூறினார்.