June 22, 2018
தண்டோரா குழு
கோவை – கேரளா எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக வந்த தகவலையொட்டி நக்சல் பிரிவு படையினர் ஆனைக்கட்டி மற்றும் மாங்கரை பகுதிகளிலுள்ள செக் போஸ்ட்டுகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சுந்தரி என்ற பெண் மாவோயிஸ்ட்,உடல்நிலை சரியில்லாததால் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளதாக ரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைக்கட்டி மற்றும் மாங்கரை பகுதிகளில் நக்சல் பிரிவு படையினர் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இரு சக்கர வாகனம்,4 சக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கேரளா பகுதிகளில் இருந்து வரும் மற்றும் செல்லும் பேருந்துகளில் உள்ளே ஏறி சென்று போலீசார் ஒவ்வொருவரையும் பார்த்தும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களையும் சோதனை செய்தனர்.
மேலும்,அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஒவ்வொரு வாகனமும் கண்காணிக்கபட்டு வருகிறது.பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் கோவை கோட்ட உதவி வனபாதுகாவலர் ராஜேஷ் கலந்து கொண்டு பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்களுக்கு கேரளா அருகிலுள்ள ஆனைக்கட்டி,மாங்கரை,பாலமலை மற்றும் தோலம்பாளையம் மலைப்பகுதிகளில் புதியதாக ஆட்கள் தென்படுகின்றனர்களா என்றும், மலைக்கிராமங்களில் உள்ள ஆதிவாசி மக்களுடன் புதியவர் யாராவது பழகி வருகின்றனர்களா என்றும் தெரிந்து உடனடியாக நக்சல் பிரிவுக்கும்,வனத்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும் யாரும் தனியாக மலைப்பகுதிக்கு செல்லாமல் மூன்று,நான்கு பேர் கூட்டாக செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.