June 20, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா ஸ்தலமாக விளங்கி வருகிறது.இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் குறிப்பாக இங்கு பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்கா,படகு இல்லம்,ரோஜா பூங்கா என கண்டு ரசித்தாலும்,இங்கு உள்ள ‘நீர்வீழ்ச்சிகள் மற்றும் காடுகளில்’ உள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கவே அதிகமாக விருப்பப்படுகின்றனர்.இப்படி இவர்கள் புதியதாக கண்டு ரசித்து வியக்க தக்க பல்வேறு இடங்கள் உள்ளன.அந்த பட்டியலில் குன்னுார்–மேட்டுபாளையம் இடையே உள்ள ‘லாஸ் நீர்வீழ்ச்சி’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்க்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அரிய வகை மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளடக்கிய ‘லாஸ் நீர்வீழ்ச்சி’ ஒரு காலத்தில் சினிமா படப்பிடிப்புகள் அதிக அளவில் நடந்த இடம் குறிப்பாக ‘அண்ணா நகர் முதல் தெரு’, ‘ரகசிய போலீஸ்’ போன்ற திரைப்படங்களில் ‘லாஸ் நீர்வீழ்ச்சியில்’ படமாக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புகூட இந்த ‘லாஸ் நீர்வீழ்ச்சி’ பகுதியில் குடிநீர் வசதி மற்றும்,சிற்றுண்டி அமர்ந்து சாப்பிடும் வகையில் மேசைகள் மற்றும் சில அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யபட்டு சுற்றுலா மேம்படுத்தபட்டது.
இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுப்பான சூழல் நிலவிவந்தது.ஆனால் காலப்போக்கில் வனத்துறையினர் லாஸ் நீர்வீழ்ச்சியை கைவிட்டனர்.இந்த நீர்வீழ்ச்சியில் குன்னூரில் உள்ள சாக்கடை நீரும் கலந்து வருவதாக கூறப்படுகிறது.இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வர தயக்கம் காட்டி வந்தனர்.
மேலும்,இந்த நீர்வீழ்ச்சியை அறிந்த ஒரு சிலர் மட்டுமே இங்கு வந்து சென்றுக் கொண்டிருந்தனர். நாளைடைவில் அப்பகுதியில் ‘சமூக விரோத செயல்கள்’ நடக்க தொடங்கியது.இங்கு சமூக விரோதிகள் மறைவாக இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ‘திருட்டு மற்றும் வழிப்பறியில்’ ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனால்,இங்கு தற்போது சுற்றுலா பயணிகள் வர அதிகம் தயக்கம் காட்டுகின்றனர்.தற்போது ‘லாஸ் நீர்வீழ்ச்சி’ பகுதி முட்புதர்கள் சூழ்ந்து மிகவும் மோசமான நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது.
எனவே அழிவின் பிடியில் பாழடைந்து வரும் லாஸ் நீர்வீழ்ச்சி பகுதியை மேம்படுத்தி அங்கு வன ஊழியரை நியமித்து பார்வையிட கட்டணம் வசூலித்து பராமரித்தால் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுலா ஸ்தலமும் பாதுகாக்கப்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.