June 12, 2018
தண்டோரா குழு
உதகை நகராட்சி மார்க்கெட்டில் 1300 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் வாடகை கட்டணத்தை உயர்த்தியது.தற்போது செலுத்தி வரும் வாடகை கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு உயர்த்தியதால்,இதனை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கட்டணத்தை குறைக்காமலும் பழைய வாடகையை பெறாமலும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.அதேசமயம்,பழைய கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.இதனால்,கடந்த இரு ஆண்டுகளாக வியாபாரிகள் புதிய வாடகை கட்டணத்தை செலுத்தாமல் இருந்தனர்.இவர்களுக்கு பல முறை வாடகை கட்டணம் செலுத்த கோரி நகராட்சி நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்,உடனடியாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளது.ஆனால்,வியாபாரிகள் செலுத்தாத நிலையில்,எவ்வித முன்னறிவிப்புமின்றி காலை திடீரென வந்த நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டில் உள்ள 33 கடைகளுக்கு சீல் வைத்தனர்.இதனால்,அங்கு வியாபாரிகள் திரண்டனர்.இதனைத்தொடர்ந்து,முன் அறிவிப்பின்றி கடைகளுக்கு சீல் வைத்தது தவறு என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால்,அதிகாரிகள் ‘நீங்கள் வாடகை கட்டணம் செலுத்ததால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’ எனக் கூறி அங்கிருந்து சென்றனர்.மார்க்கெட் கடைகளுக்கு சீல் வைத்ததை தொடர்ந்து நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் அனைவரும் மார்க்கெட் கேட் முன் திரண்டனர். இதனால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும்,உடனடியாக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதனால்,அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.மேலும்,மார்க்கெட் வளாகம் மட்டுமின்றி,ஊட்டி நகரில் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர்.இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.இந்த பேச்சு வார்த்தையில் நகராட்சி சார்பில் கமிஷ்னர் ரவி, ஏடிஎஸ்பி., கோபி, டிஎஸ்பி., திருமேனி மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.வியாபாரிகள் சார்பில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா,செயலாளர் ரவிக்குமார்,பொருளாளர் ராஜாமுகமது, வியாபாரிகள் கோபாலகிருஷ்ணன்,ரெக்ஸ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த பேச்சு வர்த்தையின் முடிவில்,தற்போதைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்ட அனைத்து கடைகளின் சீல் அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.மேலும்,புதிய வாடகை கட்டணம் செலுத்த முடியாது எனவே,பழைய வாடகை கட்டணத்தை காட்டிலும் சற்று கூடுதலாக கட்டணம் செலுத்துவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து,அதிகாரிகள் சீலை அகற்றி,33 கடைகளை திறந்து வைத்தனர்.அதன்பின், வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.