June 12, 2018
தண்டோரா குழு
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் இணைந்து பரப்புரைகளை மேற்கொள்வோம் என UNICEF நல்லெண்ண தூதுவர் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
ஜூன் 12 தேதியான இன்று,உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை ஒட்டி சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன்,தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பேரணியில் யூனிசெப்பின் நல்லெண்ண தூதரான நடிகை திரிஷா பங்கேற்று,கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை த்ரிஷா,
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை,கொத்தடிமை முறையை தடுத்து நிறுத்தி, குழந்தைகளுக்கான கல்வி தரும் இயக்கமாக யுனிசெப் (UNICEF) விளங்கி வருவதாகவும்,குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கஅனைவரும் இணைந்து பரப்புரைகளை மேற்கொள்வோம் எனவும் கூறினார்.அங்குள்ள பூங்காவில் துவங்கிய இந்த பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு,தங்களது கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.