June 9, 2018
தண்டோரா குழு
டீசல் விலையை குறைக்கவும் ஜி.எஸ்.டி.,வரம்பில் சேர்க்கக்கோரி வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வரும் 18ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அகில இந்திய சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்களால் வாடகை கட்டணத்தை நிர்ணயிக்க முடியவில்லை குறிப்பாக டீசல் விலை கடந்த 6 மாதத்தில் லிட்டருக்கு 7 ரூபாய் 40 காசு அதிகரித்துள்ளது. 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.
இதுகுறித்து கடந்த மாதம் ஏப்., 23ல் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் பெட்ரோலிய துறை அமைச்சர்,பிரதமர் மற்றும் துறை செயலர்களிடம் கோரிக்கை மனு அளித்தோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் செய்தோம். ஆனாலும் மத்திய அரசு இதுகுறித்து எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எனவே டீசல் விலையை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும் பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் சுங்கக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வரும் 18-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்காது என அவர்கள் தெரிவித்தனர்.