May 16, 2018
தண்டோரா குழு
கோவையில் குடும்ப சூழலின் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கும் மேல் எடுத்துள்ளனர்.
குழந்தைகளை தொழிலாளர்களாக அமர்த்தக் கூடாது என அரசும் பல அமைப்புகளும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,குடும்ப சூழல்,வறுமை உள்ளிட்ட பல்வேறு காரனங்களால் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.
இந்நிலையில் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக உள்ள குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு கல்வியை வழங்கி வருகின்றனர். அதில் இந்த வருடம் குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்ட,கோவை திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து உள்ளனர்.
மாணவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து உள்ளனர்.மூன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே குடும்ப சூழல் வறுமையின் காரணமாக வேலைக்கு சென்று உள்ளனர்.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ்,அவர்கள் மீட்கப்பட்டு தற்போது இந்த அளவிற்கு,படிப்பில் சாதனை படைத்து உள்ளனர்.
தரணிதரன் என்ற மாணவர்,1093 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.வறுமையின் காரணமாக திருப்பூரில் வேலை செய்து வந்த இவரை குழந்தை தொழிலாளர் நல அலுவலர்கள் மீட்ட நிலையில் தற்போது அவருக்கு வழங்கப்பட்ட கல்வியால் இந்த அளவிற்கு படித்து உள்ளார்.அதே போல மற்ற மாணவர்களும் நல்ல மதிப்பெண்களை எடுத்து உள்ளனர்.