May 11, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஐந்து குளங்கள் நிரம்பி உள்ளது.நேற்று மட்டும் 128 மில்லி மீட்டர் மழை கோவை மாவட்டத்தில் பதிவாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை மழை சராசரி அளவையும் தாண்டி பெய்து வருகிறது.கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரத்தில் பெய்து வரும் மழையினால் கிருஷ்ணாம்பதி,செல்வாம்பதி,முத்தண்ணன்,செல்வசிந்தாமணி,சிங்காநல்லூர் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருந்தது.
மேலும் மருதமலை,வடவள்ளி கால்வாய் வழியாக வந்த தண்ணீரால் இந்த குளங்கள் நிரம்பி உள்ளன.உக்கடம் குளம்,வாலாங்குளம் 80 சதவீதம் நிரம்பி உள்ளது.இருப்பினும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தினால் நொய்யல் நீர் ஆதாரத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் நீர்வழி பாதைகளை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் 128 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அமைந்து உள்ள பகுதியில் 40 மில்லி மீட்டர் மழையும்,குறைந்த பட்சமாக வால்பாறையில் 7 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.