May 9, 2018
தண்டோரா குழு
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் முபாரக்,சதாம் உசேன், சுபேர் ஆகியோரையும் அவர்களுக்கு உதவியதாக அபுதாகீர் என்பவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது.இந்த கொலையின் பின்னணியில் இயக்க ரீதியாக செயல்படும் அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கானது தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் கோவையில் 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை சுகுணாபுரம் பகுதியில் ஆரிஸ், பிலால் எஸ்டேட் பகுதியில் அஜீஸ், செல்வபுரம் பகுதியில் பிபின்ரகுமான், வெள்ளகிணறு பகுதியில் முகமது அலி, துடியலூர் சேரன் காலனி பகுதியில் சதாம்உசேன் ஆகிய 5 பேரின் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது.
மேலும்,30 க்கும் மேற்பட்ட அதிகாரகள் 5 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர்.தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு துணையாக கோவை மாநகர போலீசார் சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.