April 28, 2018
தண்டோரா குழு
29 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஹோம் காட் சார்பில் நடைபெற்ற ஹெல்மெட் அணியும் விழிப்புணர்வை கோவை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.
கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற 29வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து போலீசார் மற்றும் ஹோம்காட் போலீசார் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் காவல் ஆணையாளர் பெரியய்யா மற்றும் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் குமார் உள்ளிட்ட பல போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டு சாலை வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
இந்த பதாகைகளில் “தலைகவசம் உயிர் கவசம்”,”சாலை விதிகளை மதிப்போம்”போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியிருந்தது.
இந்த இருசக்கர வாகன பேரணியானது வ.உ.சி பூங்கா வளாகத்தில் துவங்கியது.பின்னர் அவினாசி சாலை,லட்சுமி மில் என காந்திபுரம் வழியாக வந்து மீண்டும் வ.உ.சி பூங்கா சாலையில் நிறைவடைந்தது.
இந்த விழிப்புணர்வு குறித்து மாநகர காவல்துறை துணை ஆணையாளர்(போக்குவரத்து) சுஜித்குமார் கூறுகையில்,
“சாலை விபத்துக்களை தடுக்க ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது.இந்த நாட்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.சாலை விபத்துகளினால் தனி நபர்,குடும்பம்,சமுதாயம் என பல பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே போகிறது.எனவே வாகன ஒட்டுனர்கள் தனி கவனத்துடன் சாலை விதிகளை கடைபிடித்து விபத்து இல்லாத கோவை மாநகராக மாற்ற முன் வர வேண்டும் என்றார்.
அதே போல கோவை மாநகரில் விழிப்புணர்வுகள் மூலம் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் ஆர்வம் காட்டி வருகின்றனர் எனவும் கூறினார்.இந்த சாலை விதிகளை கடைபிடிக்ககோரி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து போலீசார் ஹோம்காட் போலீசார் என 200 க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.