April 10, 2018
தண்டோரா குழு
அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடைபெறுவதால் வீரர்கள் ஹோட்டலில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
இந்தபோட்டிக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள், திரைப்பட துறையினர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி, அலை அலையாக செல்கின்றனர். இதனால் அண்ணாசாலை முடங்கியுள்ளது. போராட்டக்காரர்களின் ஐபிஎல் போட்டி ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் விளையாட்டு நடைபெறும் சேப்பாக்கம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடைபெறுவதால் வீரர்கள் ஹோட்டலில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வீரர்கள் தற்போது ஆழ்வார்பேட்டை ஹோட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.