February 23, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் முதல் பெண் போர் விமானியான அவானி சதுர்வேதிக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய இராணுவத்தில் உள்ள விமானப் படையில், பெண்களைப் பணியமர்த்த மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்திய விமானப் படையில் போர் விமானிகளாக பாவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி ஆகியோர் பல சவாலான பயிற்சிகளைப் பெற்றனர். பயிற்சிகள் முடிவுற்று அவர்கள் முறைப்படி விமானப் படை பணியில் பொறுப்பேற்றனர்.இந்நிலையில், இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி கடந்த புதன்கிழமை குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைத்தளத்தில் எம்.ஐ.ஜி. 21 ரக போர் விமானத்தை தனியாக ஓட்டிசாதனை படைத்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் சத்னாவைச் சேர்ந்தவரான அவானி, இதன் மூலம் போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின்முதல் பெண் விமானி என்ற பெருமையைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.இவரது சகோதரும் ராணுவத்தில் பணியாற்றுபவர். அவரைப் போல் நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ஆசையில் விமானப் படையில் இணைந்ததாகக் கூறியுள்ளார். சாதாரண போர் விமானங்களைவிட மிக் ரக போர் விமானங்களை இயக்குவது மிகவும் கடினம் ஆகும். இங்கிலாந்து, அமெரிக்கா, உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே போர் விமானிகளாக பெண்களை பயிற்றுவித்து வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இவர்கள் மூவரைத் தொடர்ந்து, ஜாம்நகர் விமானபடை தளத்தில் மேலும் மூன்று பெண்களுக்கு அடுத்தகட்ட போர் விமானப்பயிற்சி விமானப்படை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்தியாவின் முதல் பெண் போர் விமானியான அவானி சதுர்வேதிக்கு சச்சின் டெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.