February 22, 2018
தண்டோரா குழு
கோவையில் முதல் முறையாக 4 நாட்கள் நடைபெறும் ஆசியாவிலேயே மிகப்பெரிய 76வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டி மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வாளாகத்தில் துவங்கியது.
தமிழ்நாடு கண் சிகிச்சை நிபுணர்கள் அசோசியேஷன் மற்றும் கோவை சொசைட்டி ஆப்தாமாலஜிக் சர்ஜன்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டி மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் 6000க்கும் மேற்பட்ட கண் சிகிச்சை மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுமட்டுமின்றி 1500 சிறப்பு விருந்தினர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
நான்கு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் கண் சிகிச்சையில் சிறந்து விளங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிபுணர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த நுட்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மாநாடு துவக்க விழாவில் முதன்மை கருத்தரங்கம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து மூன்றரை நாட்களும் கண்சிகிச்சை தொடர்பான பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
அகில இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டியின் புதிய தலைவராக பதவியேற்கவுள்ள டாக்டர். அஜித் பாபு மோஜ்ஜியை அகில இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டியின் தலைவர் டாக்டர். சந்தன் கோபால் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் புதிய நிர்வாகிகள் பதிவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில், ஒரிசா திறன் மேம்பாட்டு அமைப்பின் தனி இயக்குநர் சுப்போட்டோ பைகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.மேலும், மாநாட்டில் மொத்தம் 327 கண் சிகிச்சை அறிவியல் கருத்தரங்குகள் மொத்தம் 450 மணி நேரங்களுக்கு நடைபெற உள்ளன. மொத்தம் 16 அரங்குகளில் நடைபெறும் இக்கருத்தரங்குகளில் சர்வதேச கண்சிகிச்சை நிபுணர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.