February 21, 2018
தண்டோரா குழு
மலையாளப்பட நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அறிமுக நாயகி பிரியா பிரகாஷ் வாரியர்‘ஒரு அடார் லவ்’என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாணிக்ய மலரய பூவி’ (முத்துப் பூவை போன்ற பெண்) என்ற பாடலில் பிரியா வாரியர் சக மாணவரை பார்த்து கண் சிமிட்டும் காட்சி உள்ளது. அக்காட்சியில் கண்ணசைவு மூலம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பிரியா வாரியர் ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்றார்.
இதற்கிடையில், அந்த பாடல் வரிகள் தங்களின் மத உணர்வை புண்படுத்திவிட்டதாக கூறி தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நடிகை பிரியா வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தம் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரியா வாரியர் மனு தாக்கல் செய்தார்.இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த விசாரணையில் மலையாளப்பட நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.மேலும், மகாராஷ்டிரா, ஹைதராபாத்தில் காவல்நிலையங்களில் தரப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.