February 10, 2018
தண்டோரா குழு
தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வரும் 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கமானது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கியது ஆகும். நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இதில் 4,500 எல்பிஜி லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, ஹெச்.பி.சி ஆகியவற்றின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த லாரிகள் 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.எண்ணெய் நிறுவனங்களுக்கும் லாரி உரிமையாளர்களுக்குமான ஒப்பந்த காலம் கடந்த வருடம் அக்டோபல் 31ம் தேதியன்று முடிவடைந்தது. எனினும், தற்போது 6 மாத காலம் நீட்டிப்பு செய்து லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாக புதிய டெண்டருக்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடுவது வழக்கம். எனவே, புதிய டெண்டருக்கான அறிவிப்பு கடந்த மாதம் 23ம் வெளியிடப்பட்டது.
ஆனால் தபோது வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், இனிவரும் காலங்களில் மாநில அளிவிலேயே டெண்டர் நடத்தப்படும் என்றும், அந்தந்த மாநில பதிவெண் கொண்ட லாரிகள் மட்டுமே பங்கேற்க முடியும், அதுமட்டுமின்றி 3 ஆண்டு கால ஒப்பந்தத்தை 5 ஆண்டு காலமாக நீட்டிப்பு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இதுகுறித்து பேச்சுவாரத்தை நடத்த தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம், தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய டெண்டர் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வரும் பிப்.12ம் தேதி காலை 6 மணி முதல் தென் மாநிலம் முழுவதும் உள்ள எல்பிஜி லாரிகள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் அறிவிப்பின் காரணமாக தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.