February 9, 2018
தண்டோரா குழு
தண்ணீரைக் கொடுக்க மறுக்கும் கர்நாடகாவுக்குச் சென்று ரஜினி முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,“நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் இப்போதுவரை தமிழக அரசின் நிலைப்பாடு. இதுகுறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். எனினும், மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டியது எங்கள் தலையாயக் கடமை. எனவே அதிலும் கவனம் செலுத்திவருகிறோம்’’. அ.தி.மு.க-வில் 1.5 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். 1.5 கோடி புலிகள் என்றுகூட சொல்லலாம்.
எது சரியில்லை என்று குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவில் குற்றம்சாட்டினால் வந்த சண்டையை அ.தி.மு.க. விடுவதில்லை. அ.தி.மு.க.வை சீண்டிப் பார்ப்பவர்கள் விமர்சனத்துக்குட்பட்டவர்கள் தான். ரஜினி ஆன்மீக அரசியலைப் பின்பற்றுவதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை. நாங்கள் அண்ணா வகுத்து கொடுத்த, எம்.ஜி.ஆர் வகுத்து கொடுத்த கொள்கைகளைப் பின்பற்றுவோம். ஏழைகள் நலனுக்கான ’அண்ணாயிசம்’ கொள்கை எங்களுடையது. சமூக நீதியை பேணி காப்போம். சாதி, மதம் பாகுபாடுகள் இல்லாமல் சகோதரர்கள்போல நாம் இருக்கிறோம். ஆனால், ரஜினி ஆன்மீக அரசியலின் மூலம் ஒரு மத சார்புள்ள அரசை நிறுவ நினைக்கிறார். அது நடக்காது. சிஸ்டம் சரியில்லை என்று பி.இ பட்டதாரிகள்தான் கூறுவார்கள்; ரஜினிகாந்த் என்ன பி.இ பட்டதாரியா. தண்ணீரைக் கொடுக்க மறுக்கும் கர்நாடகாவுக்குச் சென்று ரஜினி முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்” என்றார்.