February 9, 2018
தண்டோரா குழு
கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (பிப் 9) உண்ணும் விரதம் போராட்டம் நடத்தினர்.
ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி சடகோப ராமனுஜ ஜீயர் இரண்டவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் முடிந்து போன விவகாரத்தை கலவரத்தை தூண்டுவதற்காக ஜீயர் உண்ணாவிரதம் நடத்துவதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று கோவையில் உண்ணும் விரதம் போராட்டம் நடத்தினர்.
காந்திபுரம் படிப்பகம் முன்பாக கேக், ஜிலேபி,லட்டு,முறுக்கு, மைசூர்பாகு , சிப்ஸ், பொறி உருண்டை ,கடலை மிட்டாய் , பழங்கள் ,குளிர்பானங்கள் என ஏராளமான நொறுக்கு தீனிகளை வைத்து ஜீயருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய படி, அவற்றை சாப்பிட்டபடி போராட்டம் நடத்தினர்.
மேலும்,சாலையில் செல்லுபவர்களுக்கு நொறுக்கு தீனிகளை வழங்கியும் நூதன முறையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போபாராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக பேட்டியளித்த அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன்,
ஜீயர் கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே உண்ணாவிரதம் இருப்பதாகவும், உண்மையில் ஜீயர் உண்ணாவிரதம் இருக்கின்றாரா என்பதை கண்டறிய சிசிடிவி கேமரா பொருத்தி அவரை கண்காணிக்க வேண்டும் எனவும் , சோடா பாட்டில் வீசுவதாக அவர் தெரிவித்து இருப்பதால் அவரது மடத்தை சோதனையிட வேண்டும் எனவும் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.