January 24, 2018
தண்டோரா குழு
கேரளாவில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டன.இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு வாகனம் கூட கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்ல வில்லை.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 12 காசுகளுக்கும் டீசல் விலை 66 ரூபாய் 84 காசுகளுக்கும் விற்பனையாகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயைத் தொட்டுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு 75 ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே கேரளாவில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனால் ஆட்டோ, டாக்சிகள், தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகள் ஓடவில்லை.கேரளா செல்லும் தமிழகப் பேருந்துகள் கேரள எல்லையருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து கோவை வழியாக கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் மற்றும் வாளையார் தாண்டி தினமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்லும் நிலையில், தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக ஒரு லாரி கூட கோவை வழியாக கேரளா எல்லைக்குள் செல்ல வில்லை.
கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் 18 சாலை மார்க்கங்களிலும் வாகனம் செல்லாததால் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.மேலும்,பயணிகள் பேருந்து இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.