May 26, 2016
தண்டோரா குழு.
வவ்வால்களைப் பார்த்தாலோ அல்லது அதனுடைய சத்தத்தை கேட்டலோ மக்களுக்கு வெறுப்பு தான் மிஞ்சுகிறது. அது குறித்து தொலைக்காட்சியில் ஏதேனும் நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தால் கூட உடனே வேறு ஒரு சேனலுக்கு மாற்றிவிடுவது வழக்கமாக உள்ளது. அப்படி இருக்கும் போது இந்த வவ்வால்கள் ஒரு இடத்தை ஆக்கிரமித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்…
சுமார் 10,000 வௌவால்கள் ஆஸ்திரேலியா நாட்டின் ஒரு நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால், அந்த நகரத்தை அவசர நிலையாக அந்த நாட்டின் அரசு அறிவித்து உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் தென்கிழக்கு மாநிலமான நியூ சவுத் வேல்ஸ்யில் உள்ள படேமான்ஸ் பே என்னும் நகரை தி கிரே ஹீடேத் பிளையிங் பாக்ஸ் இனத்தைச் சேர்ந்த வௌவால்கள் அங்கு உள்ள ஒவ்வொரு மரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளது. இதனால் அங்கு ஒரு மோசமான நிலை உருவாகி உள்ளது.
வீட்டின் ஜன்னல்களைத் திறக்க முடியவில்லை என்றும் துவைத்த துணிகளை உலர்த்தக் கம்பிகளை உபயோகப்படுத்த முடியவில்லை என்றும் அந்த நகரில் வசிக்கும் தானியேலே ஸ்மித் தெரிவித்தார். மேலும், அவை எழுப்பும் சத்தால் தன்னால் எந்தவொரு புத்தகத்தையும் கவனித்து படிக்க முடியவில்லை என்றும் இது ஒரு வேடிக்கை அல்ல என்றும் தானியேலே கூறினார். மேலும் பேசுகையில், அவை அங்கு வந்து கட்டுப்பாட்டை மீறி உள்ளன. இதனால் அங்கு உள்ளவர்கள் எதையுமே செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தானியேலே கூறினார்,.
இவை வரலாறு காணாத அளவில் உள்ளன என்றும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று ப்ளையிங் பாக்ஸ் டாஸ்க் போர்ஸ் அணியைச் சேர்ந்த ரஸ்ஸல் ஸ்னைடர் தெரிவித்தார்.
இது குறித்து டாஸ்க் போர்ஸ் அணியைச் சேர்ந்த அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், இந்தப் பிரச்சனையால் அந்த நகரத்தைச் சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதிகாரம் இழந்தவர்களாகவும், தங்கள் சொந்த வீட்டிலேயே பிணை கைதிகள் போல இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இந்த வௌவால்கள் அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்தவை என்பதால், இவற்றைக் கொல்ல முடியாது என்றும், அவற்றை விரட்டி விட நெருப்பு மற்றும் சத்தமான கருவிகளைக் கையாள யோசித்துக் கொண்டு இருக்கின்றோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முதல்படியாக உள்ளூர் தாவரங்களை அழித்து விட வேண்டும் என்று கூறினர். இதன் விளைவாக அங்கு உள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்து விட்டனர்.
இந்தப் பிரச்சனைக்கு இது முடிவு அல்ல என்றும் காரணம் வவ்வால்கள் தகுந்த நேரத்தில் அந்த இடத்தை விடு சென்றுவிடும். அதனால் பொறுமையோடு இருப்பது தான் சிறந்தது என்றும் விலங்கியல் ஆர்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அந்த நகரத்தில் வசிக்கும் மக்கள் இதற்கு விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்த பிரச்சனை மன அழுத்தமும் மற்றும் அதிக துன்பத்தை தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.