நீலகிரி உள்ள நான்கு பழங்குடியினர் மொழிக்கான அகராதியை கோத்தகிரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியைகள் தயாரித்துள்ளனர். இதனால் பழங்குடியினர் அல்லாதோர் பழங்குடியினரின் மொழியை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் என ஆறு பழங்குடியினர் உள்ளனர். இவர்களின் மொழி பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது. எழுத்து வடிவில் இல்லை. எனவே, இவர்களின் மொழியை பழங்குடியினர் அல்லாதோர் கற்பது கடினமாக உள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தர், தோடர், இருளர், குரும்பர் ஆகிய நான்கு பழங்குடியினரின் மொழியின் சொற்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழி பெயர்த்து அகராதி தயாரித்துள்ளனர் கோத்தகிரியைச் சேர்ந்த இரு ஆசிரியைகள்.
கோத்தகிரியில் நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில் விக்டோரியா ஆம்ஸ்டிராங் நினைவு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பழங்குடியினர் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும் ஆசிரியைகள், தங்கள் முயற்சியில் கோத்தர், தோடர், இருளர் மற்றும் குரும்பர் மொழிகளில் தலா 300 சொற்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழி பெயர்த்து அகராதி தயாரித்துள்ளனர்.இதனால், பழங்குடியினர் அல்லாதோர் பழங்குடியினரின் மொழியை அறியும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
அகராதியைத் தயாரித்துள்ள ஆசிரியைகள் ஏ. காயத்ரி மற்றும் பி. தேன்மலர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் 6 பழங்குடியினர் உள்ளனர். இதில் கோத்தகிரி, குன்னூர், உதகை பகுதிகளில் கோத்தர், தோடர், இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியினர் வசிக்கின்றனர். நாவா சார்பில் இயங்கும் விக்டோரியா ஆர்ம்ஸ்டிராங் நினைவுப் பள்ளியில் பழங்குடியினர் படிக்கின்றனர். அவர்களின் மொழி அறிவது பெரும் சிரமமாக உள்ளது. பள்ளி நிர்வாகி ரோஸ்லீன் மில்ஜி, முதல்வர் சண்முகம், துணை முதல்வர் பூவிழி, நாவா செயலாளர் ஆல்வாஸ் ஆகியோர் பழங்குடியினர் மொழியின் சொற்களைக் கொண்டு அகராதி தயாரிக்கலாம் என ஆலோசனை வழங்கினர்.
அவர்களது ஊக்குவிப்பால் பழங்குடியினர் மொழி சொற்களை ஆய்வு செய்தோம். முதலில் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களில் 50 சொற்களைக் கொண்டு அகராதி தயாரிக்க முடிவு செய்தோம். பள்ளியில் உள்ள ஆசிரியைகளுக்குப் பூக்கள், பழங்கள், காய்கள், உடல் பாகங்கள், செயல்பாடு ஆகிய தலைப்புகளில் சொற்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்ய வலியுறுத்தினோம்.எங்களது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. 50 சொற்கள் என்ற இலக்கைக் கடந்து தற்போது 300 சொற்களுக்கான அகராதி தயாரித்துள்ளோம்.
பழங்குடியினர் மொழி மிகவும் கடினமானது. ஒவ்வொரு சொற்களும் ஒலி அமைப்பில் வேறுபடுகிறது. தற்போதைய தலைமுறையினருக்கு மொழிக் கலப்பால் பல சொற்கள் தெரியவில்லை. இதனால், அவர்களின் குடும்பத்தில் உள்ள முதியவர்களைச் சந்தித்து சொற்களைச் சரிபார்த்துக் கொண்டோம். இரண்டு மாதங்களில் எங்களால் அகராதி தயாரிக்க முடிந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பழங்குடியினர் மொழி பேச்சு வழக்கிலேயே உள்ளதால், அவர்களது வாழ்வியலை ஆவணப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆசிரியைகளின் முயற்சியால் பழங்குடியினர் மொழி அறிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது வரலாற்றுச் சாதனையாகவே கருதப்படுகிறது.
இந்த அகராதியைத் தயாரித்துள்ள இந்த இரு ஆசிரியைகளும் பழங்குடியினர் அல்ல என்பதுதான் குறிப்பிடத் தக்க அம்சமாகும்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு