February 25, 2017 தண்டோரா குழு
“ஜெயலலிதாவின் பெயரில் உள்ள திட்டங்களைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அவரது படங்களை அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் பயன்படுத்தக் கூடாது” என்று வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனிடம் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல்தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை கடிதம் அளித்தார்.
அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது:
” மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 14-ம் தேதி உறுதி செய்துள்ளது.
இந்தத் தீர்ப்பிற்குப் பிறகும், “உச்ச நீதிமன்றம் குற்றவாளி என்று உறுதி செய்தவ” ஒருவரின் (ஜெயலலிதா) 69-வது பிறந்த நாள் விழாவில் 69 லட்சம் மரம் நடும் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்திருக்கிறார். அந்த விழாவில் தலைமைச் செயலாளராகிய தாங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். வாக்களித்த மக்களுக்கு அரசு நிர்வாகம் குறித்து தவறான எண்ணம் ஏற்படும் வகையில் இச்செய்தி அமைந்துள்ளது.
அதே போல் ‘குற்றவாளி’ என்று அறிவிக்கப்பட்டவரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைத்திருப்பது, அரசு விழாக்களில் இடம் பெறச் செய்வது, அவரது பெயரில் அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவது எல்லாமே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.
‘குற்றவாளி’ என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் புகழ் பரப்பும் செயலில் அரசாங்கமே ஈடுபடுவதும், அரசுப் பணத்தில் திட்டங்களை அறிவித்து ‘குற்றவாளி’ என்று அறிவிக்கப்பட்டவரின் பெயரில் செயல்படுத்தி வருவதும் எதிர்கால தலைமுறையினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் மக்களாட்சியின் மாண்பின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும்.
குற்றவாளி பெயரில் தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களும், அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தாத திட்டங்களையும் தமிழக அரசு உடனடியாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
அது மட்டுமின்றி குற்றவாளியின் படங்களைச் சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது என்று உடனடியாக அரசு ஆணை வெளியிட வேண்டும். குற்றவாளியின் புகழ் பரப்பும் செயல்களைத் தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.